ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் 100 அடி உயர மின் கோபுரம் அமைக்கும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயமடைந்தார். பிறகு அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காயமடைந்த நபரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் விஜய். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.