மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்ட விடியோ ஒன்றின் மூலம், பாலிவுட் நடிகர் நடிகைகள் சிலர் போதையில் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை அன்று தனது நெருங்கிய நண்பர்களான நடிகர் நடிகைகளுக்கு விருந்து அளித்தார். அந்த விருந்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட சிறிய வீடியோ ஒன்றில் பாலிவுட் பிரபலங்கள் ஒவ்வொருவரும் சில நொடிகள் வந்து போகின்றனர். அந்த விடியோவை இயக்குநர் கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைபக்கத்தில் பகிர்ந்துள்ள அகாலி தள எம்.எல்.ஏ., மஞ்சீந்தர் சிங் சிர்ஸா, "உட்தா பாலிவுட் - நிழலுக்கும் நிஜத்துக்குமான இடைவெளி என்பது இதுதான். பாலிவுட் பிரபலங்கள் எப்படித் தங்கள் போதை முகத்தை பெருமையுடன் காட்டுகின்றனர் எனப் பாருங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு அந்த விடியோவில் உள்ள ஒருவரும் பதிலளிக்காத நிலையில் அரசியல் பிரமுகர் மிலிந்த் தியோரா தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது மனைவியும் அந்த பார்ட்டியில் பங்கேற்றிருந்தார். யாரும் போதையில் எல்லாம் இல்லை. பொய்களைப் பரப்பி பிரபலங்களை அவமரியாதை செய்ய வேண்டாம். இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.