நடிகர் பாபி சிம்ஹா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் புகார்!

தயாரிப்பாளர் ஜான் பால் ராஜ் மீது காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்து அவர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டுக் கஷ்டப்படுத்தியுள்ளார் பாபி சிம்ஹா...
நடிகர் பாபி சிம்ஹா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் புகார்!
Published on
Updated on
1 min read

பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அக்னி தேவி. இந்தப் படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் ஒன்றாகத் தயாரித்து இயக்கியுள்ளார்கள். 

அக்னி தேவி படத்தில் ஐந்து நாள்கள்தான் நடித்தேன். எனக்குப் பதிலாக வேறு ஒருவரை டூப்பாக நடிக்க வைத்து படத்தை வெளியிட்டுள்ளார்கள். இயக்குநர் ஜான் பால்ராஜ் சொன்ன கதைக்கு மாறாக வேறொரு கதையைப் படமாக்கினார். நான் நடித்த காட்சிகளை எனக்குக் காண்பிக்கவில்லை. எனவே இப்படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை எனப் படத்தின் இயக்குநர் மீது புகார் அளித்து கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் படக் கதாநாயகனான பாபி சிம்ஹா. பிறகு, பரங்கிமலை காவல் துணை ஆணையரிடமும் புகார் அளித்தார். இதனால் ஜான் பால் ராஜ் மீது ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் நந்தம்பாக்கம் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. மேலும், இந்தப் பிரச்னை பாபி சிம்ஹாவுக்கு ரெட் கார்ட் விதிக்கும் அளவுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் பிரச்னைக்கு முடிவு காணும் விதமாக பாபி சிம்ஹா - படத்தயாரிப்பாளர்கள் ஆகிய இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையை நடத்த முன்வந்ததது விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால், நீதிமன்றம் மூலமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவுள்ளதாகக் கூறி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார் பாபி சிம்ஹா. மேலும் அக்னி தேவ் படத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல் பரப்பியதாகவும் பாபி சிம்ஹா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பாபி சிம்ஹாவுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டுள்ளதாக அறியப்படுகிறது. வழக்கை வாபஸ் பெறாவிட்டால் இனிமேல் அவரை எந்தப் புதுப்படத்திலும் ஒப்பந்தம் செய்யவேண்டாம் என்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அதில், பாபி சிம்ஹா மீது சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர் ஜான் பால் ராஜ் மீது காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்து அவர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டுக் கஷ்டப்படுத்தியுள்ளார் பாபி சிம்ஹா. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று இந்தப் பிரச்னை குறித்து விளக்கம் அளித்தார்கள். இதனால் தயாரிப்பாளர் ஜான் பால் ராஜ் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ உடனடியாக ரத்து செய்யக்கோரி சென்னை துணை ஆணையர் முத்துசாமி பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com