ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்துக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று நடிகர் ஆரி ரஜினிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீனிவாச நாயுடு, நேஹா, ரேஷ்மா நடிப்பில் பிரவின் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் அம்பு என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேசியதாவது:
யாருக்கோ வைத்த பேனர், காற்றடித்ததன் காரணமாக அது அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்கிற இளம்பெண் மீது விழுந்ததால் அவர் அந்தச் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இந்த விபத்துக்குப் பிறகு, பேனர்கள் வைக்கமாட்டோம் என்று பல அரசியல் கட்சியினர் கூறிவருகிறார்கள். அதேபோல திரைத்துறையினரும் படம் வெளியாகும்போது பேனர்கள் வைக்கமாட்டோம் என முடிவெடுக்கவேண்டும். வெளிநாடுகளில் உள்ளதுபோல நம் அரசாங்கம், விளம்பரம் செய்வதற்கான இடங்களை உருவாக்கி, முறைப்படுத்தவேண்டும். அடுத்ததாக தர்பார் படம் வரப்போகிறது. சிஸ்டம் மாறவேண்டும் என்று ரஜினி சார் சொல்லிக்கொண்டு வருகிறார். உங்கள் படம் மூலமாக சிஸ்டத்தை மாற்ற முயற்சி செய்யவேண்டும். இதுபோல அனைத்து பெரிய நடிகர்களும் தங்கள் படங்களுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று கூறவேண்டும் எனப் பேசியுள்ளார்.