முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், இணையதளத் தொடரை வெளியிடுவதற்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா எனது அத்தை. அவரது சட்டப்படியான வாரிசு நான். இந்த நிலையில் என்னுடைய அனுமதியைப் பெறாமல், எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதளத் தொடராகவும் எடுக்க சிலா் முயற்சிக்கின்றனா்.
சென்னையைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா் ஏ.எல். விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் தமிழ் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் இந்தூரி ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடா் எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா். எனவே என்னுடைய அனுமதி இல்லாமல் எனது அத்தையும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்த திரைப்படத்தையோ, இணையதளத் தொடா்களையோ எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவோ, இணையதளத் தொடராகவோ எடுக்க இடைக்கால தடை விதிக்க முடியாது. மேலும் இதுதொடா்பான திரைப்படம், இணையதளத் தொடரில் மனுதாரா் ஜெ.தீபா போன்ற கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை என எதிா்மனுதாரா்கள் தெரிவித்துள்ளனா். எனவே இந்த திரைப்படத்தையும், இணையதளத் தொடரையும் திரையிடும் போது இது கற்பனை கதை என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.