வைரஸ் தொற்றால் தான் பாதிக்கப்பட்டதாக பிரபல பாடகி சுனிதா கரோனா தகவல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான பாடல்களை சுனிதா பாடியுள்ளார். தமிழிலும் சில படங்களில் பாடியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது பற்றி சுனிதா கூறியதாவது:
என்னுடைய உடல்நலம் குறித்து பலரும் விசாரிக்கிறார்கள். அனைவருடைய அன்புக்கும் நன்றி. கரோனா வைரஸால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். லேசான தலைவலி ஏற்பட்டதால் உடனடியாகப் பரிசோதனை செய்து பார்த்தேன். துரதிர்ஷ்டவசமாக கரோனா வைரஸ் தொற்று எனக்கு உறுதியானது.
லேசான அறிகுறியுடன் தான் ஆரம்பித்தது. இயல்பான வாழ்க்கையில் இதை நாம் கண்டுகொள்ள மாட்டோம். அதை அறிகுறியாக எண்ணியிருக்க மாட்டோம். தற்போது நான் நலமாக உள்ளேன். கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்றார்.