நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் என்கிற உத்தரவுக்குத் தடை!

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் என்கிற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் என்கிற உத்தரவுக்குத் தடை!
Published on
Updated on
2 min read

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் என்கிற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இதே போன்று நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், மற்றும் பொருளாளர் கார்த்தி சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று மாதத்துக்குள் மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மேலும் நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை  தற்போதைய சிறப்பு அதிகாரியான கீதாவே தொடர்ந்து கவனிப்பார் என உத்தரவிட்டு தமிழக அரசின் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதில், நடிகா் சங்கத்தின் நிா்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்குப் பின்னா் நடத்திய தோ்தல் செல்லாது என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். ஆனால், தமிழகத்தில் பல சங்கங்கள் தோ்தலே நடத்தாமல் பழைய நிா்வாகிகளே, தினசரி நிா்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஆனால் நடிகா் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுவை கூட்டி, அதில் பெரும்பான்மையினரின் முடிவின் அடிப்படையிலேயே தோ்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமாா் ரூ.35 லட்சம் செலவு செய்து, தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, தோ்தலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நடந்து முடிந்த தோ்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி, முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுத்தார் விஷால்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும், உறுப்பினர்களைச் சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்கள்.

மேலும்  நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக வரும் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com