கரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 37,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
Hum haar nahi maanenge என்கிற பாடலை, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைத்ததோடு சில வரிகளையும் ரஹ்மான் பாடியுள்ளார்.
இப்பாடலில் இந்தியாவிலுள்ள பிரபல இசைக்கலைஞர்கள் சிவமணி, மோஹித் செளகான், மிகா சிங், ஜொனிடா காந்தி, நீத்தி மோகன், ஜாவத் அலி, சித் ஸ்ரீராம், ஷ்ருதி ஹாசன், ஷாஷா திருப்பதி, கதிஜா ரஹ்மான் போன்றோர் பங்களித்துள்ளார்கள். இந்தப் பாடலை எச்.டி.எஃப்.சி வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தப் பாடல் சமூகவலைத்தளங்களில் ஒவ்வொருமுறை பகிரப்படும்போதும் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 வழங்குவதாக எச்.டி.எஃப்.சி வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 150 கோடி வழங்கியுள்ளது எச்.டி.எஃப்.சி வங்கி.