
சுவாதி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நுங்கம்பாக்கம் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, 2016 ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இதுதொடர்பாக சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தையே மிகவும் பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கு திரைப்படமாகியுள்ளது. சுவாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விசாரணை அதிகாரியாக அஜ்மல் நடித்துள்ளார். சுவாதியாக ஆயிராவும் ராம்குமாராக மனோ என்கிற புதுமுகமும் நடித்துள்ளார்கள்.
எனினும் இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். பிறகு இப்படத்தின் பெயர், நுங்கம்பாக்கம் என மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ரமேஷ் செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
சுவாதி கொலை வழக்கு என்கிற நுங்கம்பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்துக்குப் பின்பு, திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர் பாலாஜிக்கும் படத்தைக் காண்பித்து சம்மதம் பெறப்பட்டது. ராம்குமார் தந்தை தொடர்ந்த வழக்கு மற்றும் இதர வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது. இறுதியாக இப்படம் அடுத்த மாதம் (அக்டோபர்) பிரபல ஓடிடி நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.