பாலிவுட் உலகம் சுசாந்தின் திறமையை மதிக்கவில்லை என பிரபல நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார்.
கிரிகெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் திரைத்துறை - விளையாட்டுத்துறை பிரபலங்கள் எனப் பலரும் சுசாந்த் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் சுசாந்த் சிங் மரணம் குறித்து பிரபல நடிகை கங்கனா ரணாவத் விடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
நடிப்புத் திறமை, பட வெற்றிகள், புத்திசாலித்தனம் இருந்தும் சுசாந்துக்குரிய மரியாதையை பாலிவுட் அளிக்கவில்லை. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர் எப்படி மனரீதியாக பலவீனமாக இருக்க முடியும்? காய் போ சே படத்தில் அவருடைய திறமையை ஏன் யாரும் பாராட்டவில்லை? கல்லி பாய் போன்ற மோசமான படம் ஏராளமான விருதுகளைப் பெறுகிறபோது சீச்சோர் போன்ற நல்ல படம் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்?
நான் ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியும் அதற்குரிய மரியாதையை எனக்கு அளிக்கவில்லை. சுசாந்தின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா? மதிப்பில்லாதவர் என்று தன்னைப் பற்றி சொன்னவர்களை நம்பியதுதான் சுசாந்த் செய்த பெரிய தவறு என்று கூறியுள்ளார்.