நடிகை தற்கொலை வழக்கில் தயாரிப்பாளர் கைது: காரணம் என்ன?

ஸ்ரவானி தற்கொலை தொடர்பாக தேவ்ராஜ் ரெட்டி உள்பட மூவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
நடிகை தற்கொலை வழக்கில் தயாரிப்பாளர் கைது: காரணம் என்ன?

நடிகை ஸ்ரவானி தற்கொலை வழக்கில் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் ஒரு வாரத்துக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரவானியின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். 

டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான தேவ்ராஜ் ரெட்டி என்கிற நபர் தனது சகோதரியிடம் பணம் கேட்டுத் துன்புறுத்தியதாக ஸ்ரவானியின் சகோதரர் ஷிவா பேட்டியளித்தார். இதையடுத்து ஸ்ரவானியின் பெற்றோர், தேவ்ராஜ் மீது காவல்துறையில் புகார் அளித்தார்கள். இதையடுத்து தேவ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தார்கள். 

இந்நிலையில் ஸ்ரவானி தற்கொலை தொடர்பாக தேவ்ராஜ் ரெட்டி உள்பட மூவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. கடைசியாக, தெலுங்குத் தயாரிப்பாளர் அசோக் ரெட்டியை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது. விசாரணை தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகும்படி அசோக் ரெட்டிக்குக் காவல்துறை நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்எக்ஸ்100 உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ள அசோக் ரெட்டி, இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்படும் மூன்றாவது நபர். இதற்கு முன்பு சாய் கிருஷ்ணா ரெட்டி, தேவராஜ் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

ஸ்ரவானி தற்கொலை குறித்து துணை ஆணையர் (மேற்கு மண்டலம்) ஏ.ஆர். ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாவது:

எட்டு வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்காகக் குடும்பத்துடன் ஹைதராபாத் வந்துள்ளார் ஸ்ரவானி. முதலில் அவருக்கு சாய் கிருஷ்ணாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு கருத்துவேறுபாடுகளால் 2018-ல் இருவரும் பிரிந்துள்ளார்கள். இதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்த அசோக்குடன் ஸ்ரவானிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள். கடைசியாக தேவ்ராஜுடன் டிக்டாகில் ஸ்ரவானிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேவ்ராஜ் பற்றி ஸ்ரவானியின் பெற்றோர்களிடம் சாய் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். மூவருமே ஸ்ரவானியைத் திருமணம் செய்வதாகக் கூறி பிறகு மற்றவருடன் பழகுவது குறித்து அவரைத் துன்புறுத்தியுள்ளார்கள். தேவ்ராஜுடன் கடைசியாகப் பேசியபோது, சாய் கிருஷ்ணாவும் அசோக் ரெட்டியும் குடும்ப உறுப்பினர்களும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஸ்ரவானி கூறியுள்ளார். ஸ்ரவானியைத் திருமணம் செய்வதாகக் கூறிய தேவ்ராஜ் பிறகு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஸ்ரவானிக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேவ்ராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஸ்ரவானியும் தேவ்ராஜும் ஒருவர் மீது மற்றவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com