கரோனா தொற்று பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 1 லட்சத்து 96 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரை இந்தியாவில் 19 கோடியே 85 லட்சத்துத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசின் கரோனா விழிப்புணர்வுப் பிரசாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள கரோனா விழிப்புணா்வு பிரசார விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:
தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். அப்படியே சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள். முடிந்தால் இரட்டை முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். நான் என்னுடைய கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுவிட்டேன். நீங்களும் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளுங்கள். அரசு விதிமுறைகளைப் பின்பற்றி நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. கரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம். கரோனாவே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்று கூறியுள்ளார்.