மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் வெளியிட்ட செய்தியில்,
“இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க | பால்கே விருது: ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதொரு பொன் நாளாகும். இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளரான நீங்கள், நல்ல உடல்நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.”