நடிகை ராதிகா தன்னுடைய துள்ளலான , உணர்ச்சிகர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 தேதி திரைக்கு வந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தற்போது திரை வாழ்வில் 43 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
தமிழில் 'போக்கிரி ராஜா ' 'கிழக்குச் சீமையிலே' 'சூர்யவம்சம்' 'ஜீன்ஸ்' மற்றும் சமீபத்தில் வெளியான 'வானம் கொட்டட்டும்' போன்ற படங்களில் தன்னுடைய தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி என்றென்றும் பேசப்படும் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்.
இயக்குநர் பிரதாப் போத்தான் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை ராதிகா தயாரித்து நடித்திருந்தார். அப்படத்திற்கு சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
இதையும் படிக்க | கணவரைப் பிரிகிறாரா நடிகை சமந்தா? பரவும் அதிர்ச்சி செய்திகள்
அதன் பின் 1999 ஆம் ஆண்டு ராடான் மீடியா ஒர்க்ஸ் என்கிற பெயரில் சின்னத்திரை தொடர்களைத் தயாரித்து நடிக்கவும் ஆரம்பித்தார். அப்படி அவர் நடிப்பில் வெளிவந்த சின்னத்திரை தொடர்களான சித்தி , வாணி ராணி போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தமிழ், மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக படங்களில் நடித்து நிறைய விருதுகளைப் பெற்று இருக்கிறார்.
இந்நிலையில் , அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கலந்துகொண்ட ராதிகாவிற்கு , 43 ஆண்டு நிறைவை ஒட்டி படக்குழுவினர் கேக் வெட்டி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர் .