'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்புத் தளத்தில் இருந்து பிரத்யேகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை நடிகர் எம்ஜிஆர் துவங்கி, நடிகர் கமல்ஹாசன் என பலரும் திரைப்படமாக எடுக்க முயன்றனர். ஆனாலும் ஏதொவொரு காரணங்களுக்காக இந்த முயற்சிகள் தடைபட்ட வண்ணம் இருந்தன.
இயக்குநர் மணிரத்னம் இதற்கு முன்பாக நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு ஆகியோரை வைத்து சில வருடங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போதும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்த நிலையில் செக்கச் சிவந்த வானம் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு மீண்டும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரவிவர்மன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க| பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடியப்போகிறதா? : நடிகை பதில்
இந்த நிலையில் நடிகையும், இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்புத்தளத்தில் சிலர் நீல வண்ண உடையில் தங்களை முழுமையாக மூடிக்கொண்டுள்ளனர். இதனைப் பகிர்ந்த அவர், இவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல. தொழில்நுட்பக்கலைஞர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள மற்றொரு புகைப்படத்தில் அரண்மனை மதில் சுவர் மற்றும் அதன் அருகே வில் மற்றும் அம்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது போர் காட்சிகள் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.