'திரௌபதி' படத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்று ஒரு கதாப்பாத்திரம் காட்டப்பட்டிருப்பதாக அந்தப் படம் வெளியானபோது சர்ச்சை எழுந்தது. அதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் 'ஜெய் பீம்' படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் இழிவுபடுத்தப்பட்டதாக சர்ச்சை உருவாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''திரௌபதி படத்தில் ஒரு கதாப்பாத்திரம் அச்சு அசலாக திருமாவளவன் போன்று இயக்குநர் மோகன் ஜி காட்சிபடுத்தியிருப்பார். இதுகுறித்து திருமாவளவனிடம் கருத்து கேட்டபோது, இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. பார்க்க எனக்கு நேரமும் இல்லை. அதுபற்றி கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா ? : வெளியான தகவல்
விசிகவினர் அதனைப் பெரிதாக்கியிருந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கும். ஆனால் திருமாவளவன் அதனை எளிதாக கடந்துபோக சொல்லிவிட்டார். அதுதான் தலைமைப் பண்பு. அன்புமணி அப்பாவி வன்னியர் இளைஞர்களை அரசியல் சுயலாபத்துக்காக தூண்டிவிடுகிறார். பாவம் அவர்கள்'' என்று விமர்சித்திருந்தார்.
இதனைப் பகிர்ந்து பதிலளித்துள்ள தொல்.திருமாவளவன், ''கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி யார் என்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவர்களைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்வதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.