நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் நாளை ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அண்ணாத்த படத்துடன் தீபாவளிக்கு ரிலீசாக இருந்த மாநாடு திரைப்படம் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரப்பு இயக்கத்தில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த திரைப்படத்துடன் தீபாவளிக்கு ரிலீசாக இருந்தது.
ஆனால், ஒருசில காரணங்களால் திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இதற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மாநாடு படம் நாளை வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சுட்டுரையில் அறிவித்துள்ளார். மேலும்,
''நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.