நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படம் முதலில் தீபாவளிக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தீபாவளிக்கு மாநாடு படத்துடன் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படமும் வெளியாகவுள்ளதால் ரஜினிகாந்துடன் சிம்பு மோதுவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநாடு திரைப்படத்தை முழு வீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல, ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம். போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒரு போதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.
நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டில் இன்பம் காண வேண்டும் நட்டமடையக் கூடாது.
சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாகவவேண்டும். அதனால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். என்று தெரிவித்துள்ளார்.