தமிழில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை தொடர்களில் கயல் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 'கயல்' தொடருக்கு அடுத்தபடியாக 'சுந்தரி', 'வானத்தைப் போல..' ஆகிய தொடர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. காலத்துக்கேற்ப தொடர்களும் மாறி வருவதால், அவை இளைய தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.
கயல்:
சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 'கயல்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 'முந்தானை முடிச்சு', 'மரகத வீணை', 'கேளடி கண்மணி', 'அழகு' போன்ற தொடர்களை இயக்கிய இயக்குநர் பி.செல்வம் 'கயல்' தொடரை இயக்குகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் 'ராஜா ராணி', 'காற்றின் மொழி' ஆகிய தொடர்களில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகநாக நடித்து வருகிறார்.
அப்பாவை இழந்த பெண் தனியொரு நபராக தன் குடும்பத்தை சக உறவினர்கள் கொடுக்கும் பிரச்னைகளை எவ்வாறு கடந்து சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறாள் என்பதை மையமாகக் கொண்டு கயல் தொடர் இயங்கி வருகிறது.
உறவுகளின் சிக்கல், பாசம், சுயமரியாதை, காதல் ஆகிய பல உணர்வுகளை கடத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு வருவதால், டிவி சீரியல்களில் தொடர்ந்து கயல் முதலிடம் பிடித்து வருகிறது. இது அதிக அளவாக 11.83 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
சுந்தரி:
'கயல்' தொடருக்கு அடுத்தபடியாக 'சுந்தரி' தொடர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 'சுந்தரி' தொடர் 2021 பிப்ரவரி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அழகர் இயக்கும் இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடிக்கிறார்.
கருப்பு நிறத்திலுள்ள கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி மறுமணம் செய்துகொள்ளும் கணவன் முன்பு, படித்து ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு வாழும் பெண்ணின் கதையாக சுந்தரி தொடர் உள்ளது. இது 10.73 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
வானத்தைப் போல:
'சுந்தரி' தொடருக்கு அடுத்தபடியாக 'வானத்தைப் போல..' தொடர் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. சன் தொலைக்காட்சியில் 2020 டிசம்பர் முதல் வானத்தைப்போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் வரும் தொடர் என்பதால் கூடுதல் சிறப்புடையதாக வானத்தைப்போல உள்ளது.
ராஜ் பிரபு எழுத, ஏ.ராமச்சந்திரன் இயக்கத்தில் இந்த தொடர் உருவாகி வருகிறது. அண்ணன் - தங்கை என்ற முதன்மை பாத்திரத்தில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் நடிக்கின்றனர்.
தொடரின் ஆரம்பத்தில், இவர்களுக்கு பதிலாக முறையே தமன் குமார், ஸ்வேதா கேல்ஜ் அண்ணன் - தங்கை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது அண்ணன் உயிருக்கு தங்கையும், அவளுக்கு பிறக்கப்போகும் குழந்தையும் மாறிவிடுவார்கள் என்ற கோணத்தில் கதை நகர்வதால், விறுவிறுப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்த தொடர் 9.93 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
பாரதி கண்ணம்மா:
சன் தொலைக்காட்சியின் தொடர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நிலையில், விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடர் 4வது இடத்திலுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் 2019 பிப்ரவரி முதல் பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மலையாள மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் ரீமேக்காக பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மேயாதமான் திரைப்படத்தில் நடித்த அருண் பிரசாத் இந்த தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக விணுஷா தேவி நடித்து வருகிறார். முன்பு ரோஷிணி ஹரிபிரியா நடித்து வந்தார். அவரைத் தொடர்ந்து ஃபரீனா, ரூபா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பிரவீன் பென்னெட் இந்த தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடர் 9.50 ரேட்டிங் பெற்று 4வது இடத்தில் உள்ளது.