ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாயுள்ள ஆல்பமான ’மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் யூடியூப் டெரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த சில வாரங்களாக பீஸ்ட் திரைப்படத்தின் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.ரகுமானின் பாடல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கிய மாஜா தளத்தில் அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி வருகின்றனர்.
அந்தவகையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து தயாரித்து வெளியிட்டுள்ள இசை ஆல்பம்தான் 'மூப்பில்லா தமிழே தாயே'. தமிழின் தொன்மையையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக இப்பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலுக்கு பாடலாசிரியர் தாமரை வரிகளை எழுதியுள்ளார்.
மார்ச் 24 அன்று துபாய் எக்ஸ்போவில் ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், வெள்ளிக்கிழமை மாஜாவின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.
பாடல் வெளியாகி இரண்டு நாள்களாகிய நிலையில், தற்போது யூடியூப் தளத்தின் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை ஏ.ஆர்.ரகுமான் சுட்டுரையில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே முன்னாள் முதல்வரும், கவிஞருமான கருணாநிதி வரிகளில் செம்மொழியான தமிழ் மொழியே பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாக பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் முதலிடத்தில் இருந்தது. தற்போது ஏழு நாள்களான நிலையில், டிரெண்டிங்கில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது.