தன் உடல்நிலை குறித்த கேள்விக்கு அழுதபடி பதிலளித்துள்ளார் நடிகை சமந்தா.
ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம், நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
மேலும், சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) எனும் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. ரசிகர்களின் அன்பினால் மட்டுமே இந்த கடினமான காலத்தை கடந்து வந்ததாக கூறியிருந்தார். சிகிச்சை எடுத்துக்கொண்டே டப்பிங் செய்த புகைப்படங்கள் வைரலானது.
இதையும் படிக்க: ’மொச்ச கொட்டை பல்லழகி..’ காப்பியடிக்கப்பட்டதா ’ரஞ்சிதமே’ பாடல்?
படத்தின் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட சமந்தா ‘புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா..மாமா’ பாடல் இத்தனை பெரிய வரவேற்பைப் பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு, சண்டைக் காட்சிகளில் நடிப்பதை விட கவர்ச்சியாக நடிப்பது கடினம்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சமந்தாவின் உடல்நிலை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு சமந்தா அழுதபடி ‘வாழ்க்கையில் நல்ல நாள்களும் மோசமான நாள்களும் வரும். என் உயிருக்கு ஆபத்து என பலர் சொல்கிறார்கள். நான் சாகற நிலைமையில் இல்லை. 3 மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டதில் கொஞ்சம் தேறியிருக்கிறேன்.இந்த நோயிலிருந்து போராடி மீண்டு வருவேன். நான் மட்டுமல்ல இங்கு நிறைய பேர் பல கஷ்டங்களுடன் போராடி வருகின்றனர்’ எனக் கூறினார்.
தற்போது, இப்பேட்டி வைரலாகி வருகிறது.