விஜய் தேவரகொண்டாவின் ’லைகர்’ திரைப்பட தோல்வியால் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அப்படத்தின் விநியோகிஸ்தர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான ‘லைகர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
படத்தில் கதை இல்லாதது, நீளம் ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டாலும் வெளியீட்டிற்கு முன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா இருக்கையில் அமர்ந்தபடி மேஜையின் மீது கால்களை விரித்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த நிகழ்வைப் டிவிட்டரில் பகிர்ந்து பல ரசிகர்கள் ‘பாய்காட் லைகர்’(boycott liger) என அப்படத்தை புறக்கணிக்கத் துவங்கியதும் மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லைகர் படத்தின் தெலுங்கு விநியோகிஸ்தர் வராங்கல் ஸ்ரீனு, ’இப்படத்தால் என் முதலீட்டில் 65 சதவீதமான பணம் முழுவதும் போய்விட்டது. இப்படியொரு தோல்வியைப் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாமே நாசமாகப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். திரையுலகம் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
அவருக்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய பலரும் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர்.