தன் மீதான குற்றச்சாட்டுக்கு இயக்குநர் லிங்குசாமி விளக்கமளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமி தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் ,பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தார்.
இந்தக் கடன் தொகையைச் திருப்பி செலுத்தாமல், தொடர்ந்து படம் எடுத்ததையடுத்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவதனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிடல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடரந்து இயக்குநர் லிங்குசாமி, ரூ.1.3 கோடிக்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினார்.
இதையும் படிக்க | பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்ததையடுத்து இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கைத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
இதற்கு விளக்கமளித்து இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.
இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிட்டெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் இன்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் இன்று மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்ட ரீதியாக சந்திக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.