மீண்டும் இணைகிறது உதயநிதி - அருண்ராஜா கூட்டணி!
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசிய இந்தப் படம் தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி’ என்கிற பெயரில் உருவானது.
கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் அருண்ராஜாவின் முழு ஈடுபாடுதான் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெற்றிக்கான காரணம். அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினியை வைத்து ‘ஜெய்லர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அதைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை அருண்ராஜா இயக்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.