நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு திருணம் செய்துகொள்ள இருவரும் திட்டமிட்டு வந்ததாகத் தெரிகிறது.
காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியான நாளன்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உணர்வுபூர்வமான பதிவொன்றினைப் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதையும் படிக்க | கேஜிஎஃப் 2 (ஹிந்தி): வசூலில் புதிய சாதனை
இதன்பிறகு, இருவரும் ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றனர். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், திருமண ஏற்பாடுகளைப் பார்வையிடவே திருப்பதிக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் சமூக ஊடக பக்கங்களில் வைரலாக தொடங்கிவிட்டன.
எனினும், இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தரப்பில் வெளியிடப்படவில்லை.