நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட நடிகர் கிருஷ்ணா, மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
இவரின் மறைவை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
“மூத்த தெலுங்கு நடிகர் "சூப்பர்ஸ்டார்" கிருஷ்ணா மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன். தெலுங்குத் திரையுலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடியாக கிருஷ்ணா திகழ்ந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்யவியலாத இழப்பாகும்.
கிருஷ்ணாவின் மகன் நடிகர் மகேஷ்பாபு மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.