கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘காந்தாரா’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
சாதாரண சினிமாவாக முடிந்திருக்க வேண்டிய படம். ஆனால், தொன்மங்களையும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றியிருக்கிறார்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ’காந்தாரா’ கன்னடத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.200 கோடிவரை இப்படம் வசூலைக் குவிக்கும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கணித்துள்ளனர்.