ஆஸ்கர் மேடையில் நடிகர் வில் ஸ்மித்தால் தாக்கப்பட்ட கிறிஸ் ராக் தற்போது அது பற்றி மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு மார்ச் 27இல் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் முடியில்லா தலையைப் பற்றி கேலியாகக் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தனர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வில் ஸ்மித் அந்த மேடையிலேறி கிறிஸ் ராக்கைக் கன்னத்தில் அறைந்தார்.
இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையானது. பின்னர், நோயின் காரணமாக மனைவிக்கு முடி கொட்டும் பிரச்னையால் அவருடைய மனது பாதிக்கப்பட்டது. அதனால் கோபத்தில் அடித்தேன் என வில் ஸ்மித், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
ஆனால், முதன்முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித்தை ஆஸ்கர் கமிட்டி 10 ஆண்டுகள் ஆஸ்கர் குழுவிலிருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் ராக் அந்த நிகழ்ச்சிக்கு அடுத்த நாளே இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கிறிஸ் ராக், சேப்பல் இருவரும் சேர்ந்து ஆஸ்கர் விருது மேடையில் நடந்ததைப் பற்றி லிவர்பூலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
“நான் கூறியதிலேயே மிகவும் நல்ல நகைச்சுவை அதுதான். அதற்காக என்னை வில் ஸ்மித் அடித்து விட்டாரே” என கிறிஸ் ராக் கிண்டலாக கூறியுள்ளார். மேலும் மக்களை பார்த்து “இந்த நகைச்சுவை உங்களைப் பாதித்ததா?” எனவும் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.