பாக்கியலட்சுமி தொடரின் தெலுங்கு மொழி உருவாக்கத்தில் நடிகை கஸ்தூரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் தெலுங்கு மொழியில் எடுக்கப்படவுள்ளது. தமிழில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது காப்புரிமை பெற்று தெலுங்கு மொழியில் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இன்டி குரு லக்ஷ்மி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் நடிகை கஸ்தூரி நாயகியாக நடிக்கவுள்ளார். தமிழில் பாக்கியலட்சிமி தொடரில் நடிகை கே.எஸ். சுசித்ரா நாயகியாக நடித்துவருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் சிறந்த கதாநாயகிக்கான விஜய் டிவி விருதை கே.எஸ். சுசித்ரா கடந்த ஆண்டு பெற்றார்.
அதோடு மட்டுமின்றி வி.ஜே.விஷால், ரித்திகா போன்ற சின்னத்திரை பிரபலங்களும் நடிப்பதால் இந்தத் தொடர், இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. தமிழில் இந்தத் தொடரை சிவ சேகர் - டேவிட் இயக்குகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளைக் கடந்து பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
திருமணத்துக்கு பிறகு குடும்ப பொறுப்புகளை சுமக்கும் பெண், தன் சுயமரியாதைக்காக தொழில் முனைவோராக மாறி, அதற்காக ஆங்கிலம் கற்பது, கல்லூரிக்கு செல்வது என பல முயற்சிகளை மேற்கொள்வார். இதனால் இந்தத் தொடர் இல்லத்தரசிகளின் விருப்பத் தொடராக மாறியுள்ளது.
தற்போது, பாக்கியலட்சுமி தொடர் தெலுங்கு மொழியிலும் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.