
எதிர்நீச்சல் தொடர் இயக்குநர் திருச்செல்வம் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பணிபுரிந்துள்ளார்.
இந்த செய்தியை அறிந்த எதிர்நீச்சல் தொடர் ரசிகர்கள், இளையராஜாவுடன் எப்போது பணிபுரிந்தார்? படத்திலா? அல்லது சின்னத்திரை தொடரிலா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் அதிக அளவிலான ரசிகர்களைக்கொண்டுள்ளது. இல்லத்தரசிகளைத் தாண்டி இளம் தலைமுறை ரசிகர்களையும் எதிர்நீச்சல் தொடர் கொண்டுள்ளது.
மேலும் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பி பட்டியலிலும் முதன்மை இடத்தில் உள்ளது. இரவு நேரத் தொடர் அதிக புள்ளிகளை டிஆர்பி பட்டியலில் பெறுவது இதுவே முதல்முறை.
பிற்போக்குத்தனங்களை காட்டும் தொடர்களுக்கு மத்தியில், படித்த பெண்கள் திருமணத்துக்கு பிறகு சந்திக்கும் பிரச்னைகளையும், முற்போக்கான தீர்வுகளையும் கொடுக்கும் தொடராக எதிர்நீச்சல் உருவாகிவருகிறது. இதனால், இந்தத் தொடர் பலரைக் கவர்ந்துள்ளது.
இந்தத் தொடரை இயக்கும் திருச்செல்வம் இதற்கு முன்பு கோலங்கள் தொடரை இயக்கியவர். சின்னத்திரை வரலாற்றில் முதல்முறையாக ஆயிரம் எபிஸோடுகளை தாண்டி ஒளிபரப்பான தொடர் கோலங்கள். இவ்வாறு பல பெருமைகளையுடைய தொடர்களை இயக்கிவரும் திருச்செல்வம், ஆரம்பகட்டத்தில் இசைத்துறையில் பணியாற்றியுள்ளார்.
சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு சினிமாவையே கனவாக கொண்டுள்ளார் திருச்செல்வம். அதனால் சவுண்ட் எஞ்சினியரான அவர், இளையராஜாவிடம் பணிக்குச் சேர்ந்துள்ளார். அவருடன் காதலுக்கு மரியாதை படத்தின் பாடல்களுக்கு ஒலிக்கோர்ப்பில் பணிபுரிந்துள்ளார். இதனை நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்கள் படங்களில் இசைத்துறையில் பணியாற்றி வந்த திருச்செல்வம், பின்னர் வருமானத்துக்காக சின்னத்திரை இயக்குநர் திருமுருகனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளார். திருமுருகன் மெட்டி ஒலி தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.