இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய முடியாததால் அப்படம் கைவிடப்பட்டது.
தற்போது, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பதிவில், “ லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) படத்தின் தலைப்பினை போலவே படமும் சுவாரசியமாக இருக்கும். நேற்று மாலை 3 மணியிலிருந்து காலை 3 மணி தொடர்ச்சியாக 12 மணி நேரம் படத்துக்கான பயிலரங்கம் (ஒர்க்ஷாப்) நடைபெற்றது.
விக்னேஷ் சிவன், பிரதீப் ஆகியோருக்கும் எனக்கும் நல்ல செஷனாக அமைந்தது. விக்னேஷ் சிவன் மிகவும் கவனமாக அவரது சிறந்த படமாக எங்களை வைத்து உருவாக்குகிறாரென நினைக்கிறேன். நகைச்சுவை நிறைந்த, என்டர்டெயினிங்கான, அழகான புதிய காலத்துக்கான காதல் படமாக எல்ஐசியை உருவாக்க இருக்கிறார். முந்தயாரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களிடயே நல்ல வரவேற்பினை பெற்றது. அதற்கு முன்பாக வெளியான மார்க் ஆண்டனி படமும் நன்றாக வசூலித்தது. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களிடையே கவனம் பெறுவதால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.