சின்னத்திரை நடிகர் சித்து தனது மனைவியும் நடிகையுமான ஸ்ரேயா அன்ஜனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மனைவியின் பிறந்தநாளையொட்டி அவர் கொடுத்த பரிசுகளால் நடிகை ஸ்ரேயா மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளார்.
தனது மகிழ்ச்சியை சமூக வலைதளப் பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் ஸ்ரேயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கணவன் மனைவியாக மாறியவர்கள் சித்து - ஸ்ரேயா தம்பதி. நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி -2 தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சித்து. அதனைத் தொடர்ந்து பல்வேறு தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் தோன்றிய சித்து, தற்போது திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதேபோன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஜினி என்ற தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை ஸ்ரேயா. இதுமட்டுமின்றி திருமணம், நந்தினி உள்ளிட்ட தொடர்களிலும் நாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.
திருமணம் தொடரில் ஸ்ரேயாவும் சித்துவும் இணைந்து நடிக்கும்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 2021-ல் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் பிறந்தநாளையொட்டி நடிகர் சித்து, தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனியாக பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இது தொடர்பான படங்களைப் பதிவிட்டுள்ள நடிகர் சித்து, ''என் வாழ்க்கையில் அர்த்தம் சேர்த்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உன் சிரிப்பைப்போலவே உன்னுடைய நாள்களும் அழகாக வேண்டும். இருவரும் இணைந்து, இதே மகிழ்ச்சியுடம் ஆண்டுகளைக் கடக்க வேண்டும். உன் கனவுகளை கடவுள் நனவாக்குவார்.
என் பேரழகியே, உன்னை சந்தித்த பிறகுதான் அறிந்துகொண்டேன், ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வெளிப்படுத்தக்கூடிய உன்னத உணர்ச்சிகளில் காதலும் ஒன்று என. உன்னை நிலவையும் தாண்டிய அளவுக்கு, இந்த பூமி உள்ளவரை காதலிப்பேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.