சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்த ராகம்' தொடர் மராத்தி மொழியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. ஒரு தொடர் வெற்றிகரமாக முடிந்த பிறகு மாற்று மொழியில் மறு உருவாக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால்,
'ஆனந்த ராகம்' தொடர் சன் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், முடிவதற்கு முன்பே மாற்று மொழியில் உருவாகிறது.
அழகும் அறிவும் நிறைந்த இளம் பெண், பணக்கார குடும்பத்தில் பணிபுரிவதோடு மட்டுமல்லாமல் அந்தக் குடும்பத்துக்கு எந்தவகையிலெல்லாம் உதவியாக இருக்கிறாள் என்பதை திரைக்கதையாக வைத்து 'ஆனந்த ராகம்' தொடர் நகர்கிறது.
இந்தத் தொடரில் அனுஷா பிரதாப் - அழகப்பன் ஆகியோர் ஈஸ்வரி - அழகு சுந்தரம் என்ற முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரீத்தி சஞ்சீவ், சிவகுமார், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கதையம்சத்துக்கு ஏற்ப நகைச்சுவைக்கும் சரிபாதி முக்கியத்துவம் கொடுப்பதால் இந்தத் தொடர் மக்கள் மத்தியில் வெகுவாக சென்றடைந்துள்ளது.
ஆனந்த ராகம் தொடருக்கு குமாரசாமி செல்வபாரதி வசனம் எழுத சதாசிவம் பெருமாள் இயக்குகிறார். அவுரா கிரியோஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்தத் தொடர் தற்போது மராத்தி மொழியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பிப்ரவரி 20 முதல், சன் மராத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சரிகா நவாதே, அபிஜீத் சாவன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.