விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'மெளன ராகம்' தொடரின் 2வது அத்தியாயம் முடியும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பிரைம் டைம் என சொல்லப்படும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகளிடம் சென்று சேர்ந்துள்ளது.
அந்தவகையில் வார நாள்களில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் 'மெளன ராகம்' -2. இந்தத் தொடருக்கு குடும்பத் தலைவிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரும் ரசிகர்களாக உள்ளனர்.
'மெளன ராகம்' -1 2017ஆம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் வரை ஒளிபரப்பானது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த 2021 முதல் 'மெளன ராகம்' -2 ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் சக்தியாக ரவீனா தாஹா, கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜிவ் பரமேஸ்வர், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித், ஸ்ருதியாக ஷில்பா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மனோஜ் குமார், எம்.ஆர். சரவணகுமார் என இரு இயக்குநர்கள் இந்தத் தொடரை இயக்குகின்றனர்.
மெளனராகம் -2 தொடர் விரைவில் முடியவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுவரை 568 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளன. இந்நிலையில் மார்ச் 4ஆம் தேதியுடன் இந்தத் தொடர் முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. நல்ல தொடர்களை விரைவில் முடித்து விடுவதாகவும் அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.