ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலுவின் அடுத்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் வெளியான லவ் டூடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுடன் அடுத்த படத்திற்கான கதை குறித்து ரஜினி கலந்துரையாடியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் ஞானவேலிடமும் ரஜினி கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதை சமூக பிரச்னையை மையமாக கொண்டுள்ளதால் ரஜினிக்கு கதை பிடித்துள்ளதாகவும், சிறிய மாற்றங்களுடன் விரிவான கதையை ரஜினி கேட்டுள்ளாராம்.
இதையும் படிக்க | வரி செலுத்தாததால் ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ்!
அதேபோல், சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா, ஞானவேலுவிடம் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்யுமாறு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் இரண்டு ஸ்டார் நடிகர்கள் ஞானவேலுவின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால், யாரை ஞானவேல் இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.