சீதா ராமன் தொடரிலிருந்து விலகிய பிரியங்கா நல்காரி புதிய கதாநாயகியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீதா ராமன் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா நல்காரி.
இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். ரோஜா தொடர் சின்னத் திரை டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தது. இதன் எதிரொலியாக இவர் நடித்துவந்த சீதா ராமன் தொடருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக சீதா ராமன் தொடலிருந்து விலகுவதாக பிரியங்கா நல்காரி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த பாத்திரத்தில் நடிக்க நடிகை ஸ்ரீ பிரியங்கா உறுதி செய்யப்பட்டார்.
ஸ்ரீ பிரியங்கா மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் நடித்தவர்.
இந்நிலையில், பிரியங்கா நல்காரி நடித்து வந்த தனது சீதா கதாபாத்திரத்தை ஸ்ரீ பிரியங்காவிடம் ஒப்படைப்பது போல புதிய முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இதுவரை சீதாவாக தனக்கு அளித்து வந்த ஆதரவையும் அன்பையும் இனி சீதா பாத்திரத்தில் புதிதாக நடிக்கவுள்ள ஸ்ரீபிரியங்காவுக்கும் வழங்க வேண்டும் என பிரியங்கா நல்காரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.