2019ஆம் ஆண்டு பகிரப்பட்ட ஒரு புகைப்படம் தற்போதும் பரபரப்பான புரளியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் புரளிக்கு எப்போதும் வயசாகாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகம் ஒன்றில், ராம் சரணின் மனைவி உபாசனா தான் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்தவர். அதில், தமன்னா தனது விரலில் மிகப்பெரிய வெள்ளை நிறக் கல்லில் மோதிரம் அணிந்திருந்தார். அப்போதே அது பல புரளிகளை உருவாக்கி சமூக ஊடகங்களை புரட்டிப்போட்டிருந்தது. ஊடகங்களிலும் செய்தியாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. சென்னை தீவுத்திடலில் என்னென்ன வரப்போகிறது?
ஆனால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் அது குறித்து பல்வேறு தகவல்கள் தற்போதும் பரவிவருகிறது. நல்ல வேளை.. மேலும் புரளியை பரவ விடாத வகையில், தமன்னா விளக்கம் அளித்து அணைகட்டிவிட்டார்.
2019ஆம் ஆண்டு ராம் சரண் தயாரித்த சைரா நரசிம்ம ரெட்டியில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சைரா வெளியான சிறிது நேரத்திலேயே ராம் சரணின் மனைவி உபாசனா தமன்னாவின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் தமன்னா அணிந்திருப்பது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய வைரம் என்றும், அதனை தமன்னாவுக்கு உபாசனா பரிசளித்திருந்தார் என்றும் தகவல்கள் பரவின. அது மட்டுமல்ல, அந்த வைர மோதிரத்தின் மதிப்பு 2 கோடி என்றும் கூறப்பட்டது. இந்த புகைப்படத்துக்கு தமன்னாவே தனது கருத்தை படத்தில் சேர்த்து மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
என் கையில் அணிந்திருப்பது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய வைரமெல்லாம் இல்லை. அது வெறும் பாட்டில் ஓபனர் என்று விளக்கம் அளித்திருக்கிறார் நடிகை தமன்னா. பாட்டில் ஓபனரை வைத்துக் கொண்டு விளையாட்டாக புகைப்படங்கள் எடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் கூடுதல் விசேஷம் என்னவென்றால், இதே புகைப்படம், 2019ஆம் ஆண்டும், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பரவிய போது, தமன்னாவும் இதே விளக்கத்தை ஏற்கனவே அளித்திருக்கிறார் என்பதுதான். ஆனால் அப்போதும், அவர் அது வைரமல்ல.. பாட்டில் ஓபனர் என்றுதான் கூறியிருக்கிறார்.