ஏகே - 62 படத்திற்குப் பின் நடிகர் அஜித்குமாரின் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் ஜன.11ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் சில பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
ஆனால், விக்னேஷ் சிவன் தன் டிவிட்டர் பக்கத்தில் ஏகே 62 பற்றிய தகவலை நீக்கியதும் அவர் படத்திலிருந்து விலகியது உறுதியானது.
இதையும் படிக்க: ’தந்தையால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்..’: குஷ்பு வேதனை
அவருக்கு பதிலாக ‘கலகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ’ஏகே 62’ படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளதாகவும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஏகே - 62 படத்தை முடித்துக்கொடுத்ததும் நடிகர் அஜித் தன்னுடைய உலக சுற்றுப் பயணத்தின் இரண்டாவது கட்டத்தை துவங்குவார் என்றும் இந்தப் பயணத்திற்கு ‘பரஸ்பர மரியாதைப் பயணம்’ என பெயரிட்டிருப்பதாகவும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.