குக் வித் கோமாளியிலிருந்து விலகிய மணிமேகலை வாழ்வில் தற்போது முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. தனது கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டுவதற்கான பணிகளில் மணிமேகலை மற்றும் அவரின் கணவர் உசேன் களமிறங்கியுள்ளனர்.
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய மணிமேகலை படிப்படியாக சின்னத்திரையில் புகழ் பெற்ற நபர்களில் ஒருவராக மாறினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன்மூலம் அவருக்கான ரசிகர் பட்டாளம் மேலும் அதிகரித்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறன் மூலம் மக்களை மகிழ்வித்துவந்த மணிமேகலை, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்த சம்பவம் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவருடன் கலந்துகொண்ட சக சின்னத்திரை நடிகர்கள் மணிமேகலையின் எதிர்காலத்துக்காக வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
மணிமேகலைக்கு புதிய வாய்ப்புகள் வந்துள்ளதால், குக் வித் கோமாளியிலிருந்து விலகுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தனது சொந்த கிராமத்தில் மணிமேகலை - உசேன் தம்பதியினர் சொந்தமாக வீடு கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட புகைபடத்தை மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, எச்.எம். பண்ணை வீடு பாலக்கால் பூஜை. கடவுளின் ஆசிர்வாதத்தாலும், எங்களின் கடின உழைப்பாலும் கிராமத்தில் எங்கள் குட்டி மாளிகையை உருவாக்குகிறோம். கனவு காணுங்கள். செயல்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மணிமேகலையின் கனவு நிஜமானதற்கு சக நடிகைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.