பிரதீப் ஆண்டனிக்கு ‘ரெட் கார்டு’ கொடுக்கப்பட்டதற்கு எதிராக சக பெண் போட்டியாளர்கள் போர் கொடி தூக்கியதால் பிக் பாஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 போட்டி 5 வாரத்தை கடந்துள்ள நிலையில் அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி, பிரதீப் ஆண்டனி, அன்ன பாரதி உள்ளிட்டோர் வெளியேறியுள்ளனர்.
இதில், கடந்த வாரம் ‘ரெட் கார்டு’ கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார்.
மாயா, பூர்ணிமா, ரவீனா, ஜோவிகா, நிக்ஷன், மணி, விஷ்ணு, விக்ரம் சரவணன் உள்ளிட்டோர் பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை தொகுப்பாளர் கமல்ஹாசன் முன்பு சனிக்கிழமை வைத்தனர்.
குறிப்பாக மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றலாமா அல்லது எச்சரிக்கை செய்து மீண்டும் போட்டியில் தொடர அனுமதிக்கலாமா என்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் தனித்தனியே வாக்கெடுப்பு நடத்தினார்.
இதையும் படிக்க | கமல் - 234 போஸ்டரில் இருக்கும் வரிகள்!
இதில், அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், விசித்திராவை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப்புக்கு எதிராக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் போட்டியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதீப்பை திட்டமிட்டு குழுவாக சேர்ந்து வேண்டுமென்றே வெளியேற்றியதாக விசித்திரா குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, விசித்திராவிடம் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அர்ச்சனாவும் பிரதீப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதீப்பின் வெளியேற்றம் நியாயமற்றது எனத் தெரிவித்து பாடலாசிரியர் சினேகன், நடிகர் கவின், நடன இயக்குநர் அமீர், நடிகை பாவினி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.