கார்த்திகை தீபம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் அர்த்திகா, தனது நீண்ட நாள் காதலரைத் திருமணம் செய்துகொண்டார். கேரளத்தில் பிரமாண்டமாய் நடைபெற்ற திருமண நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நாயகியாக நடிப்பவர் நடிகை அர்த்திகா. கார்த்திகை தீபம் தொடரில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
செம்பருத்தி தொடருக்குப் பிறகு ஜீ தமிழில் அதிகப்படியான மக்களைக் கவர்ந்தது கார்த்திக் - அர்த்திகா ஜோடி. இதனால் கார்த்திகை தீபம் தொடர், ஜீ தமிழ் தொடர்களில் முதன்மையானதாக நீடித்து வருகிறது.
நடிகை அர்த்திகா இதற்கு முன்பு 4 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் கார்த்திக் உடன் நடித்த பிளாக் அண்ட் வொயிட் திரைப்படம் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
படங்களில் நடித்திருந்தாலும், கார்த்திகை தீபம் தொடரில் மட்டுமே அதிகப்படியான ரசிகர்கள் அர்த்திகாவுக்கு கிடைத்தனர். தமிழ்நாட்டு ரசிகர்களால் தனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அர்த்திகா அடிக்கடி கூறுவதுண்டு. அதோடு மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆண்களைப் பிடிக்கும் எனவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அர்த்திகா சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது தனது காதலருடன் கேரளத்தில் திருமணம் செய்துகொண்டார். அதன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து, வாழ்க்கையில் சிறந்த தருணங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அர்த்திகாவுக்கும் அவரின் கணவருக்கும் சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.