ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
ரூ. 600 கோடி வசூலைக் கடந்து ஜெயிலர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், அனிருத் ஆகியோரை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவர்கள் அனைவருக்கும் கார்களை பரிசளித்தார்.
பின், லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவர்களுக்கு காசோலையாகவும் வழங்கினார்.
இதையும் படிக்க: ரூ.1,000 கோடி வசூல் பட்டியலில் இணையுமா ஜவான்?
ஆனால், படத்தில் வில்லனாக நடித்த விநாயகனுக்கு எதுவும் இல்லையா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பினர். இந்நிலையில், படத்தின் வெற்றி குறித்து விநாயகன் பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், “ ரஜினி சார் நடிக்கிறார் எனத் தெரிந்ததும் ஜெயிலர் கதையைக் கூட முழுமையாகக் கேட்காமல் ஒப்புக்கொண்டேன். வீட்டிலிருந்து வெளியே போகமுடியாத அளவிற்கு இப்படம் வெற்றியைப் பெற்றுள்ளது. கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. மிக்க நன்றி நெல்சன். ரஜினி சார் இதை மறக்க மாட்டேன்.” எனக் கூறியுள்ளார்.