துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும், அந்த படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு!
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத துவக்கத்தில் அபு தாபியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இதில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.