நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2013-ல் மலையாளத்தில் அறிமுகமான அபர்ணா தமிழில் ‘8 தோட்டாக்கள்' மூலம் காலடி எடுத்து வைத்தார். 2019இல் வெளிவந்த ‘சர்வம் தாள மயம்' தமிழில் அபர்ணாவின் இரண்டாவது படம்.
இரண்டு தமிழ் படங்களில், பத்திற்கு மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருந்தாலும் கிடைக்காத அங்கீகாரத்தை, பிரபலத்தை தமிழில் மூன்றாவது படமான "சூரரைப் போற்று' படத்தில் நடித்ததன் மூலம் அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்தது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: பிரியாமணியின் மிரட்டலான ‘கொட்டேஷன் கேங்’ டீசர் வெளியீடு!
இந்நிலையில் வினித் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவான ‘தங்கம்’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வு கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அப்போது, திடீரென மேடையில் ஏறிய மாணவர் ஒருவர் அபர்ணாவை வலுக்கட்டாயமாக எழச்செய்து அவர் தோளை அணைத்து புகைப்படம் எடுக்க முயன்றார். ஆனால், அவர் பிடியிலிருந்து அபர்ணா விலகிச்சென்றார்.
பின், அம்மாணவர் மன்னிப்பு கேட்டு கைகொடுக்க முன்வந்தார். ஆனால், அபர்ணா கைகொடுக்க மறுத்துவிட்டார்.
எதிர்பாராத இந்நிகழ்வு படக்குழுவினரையும் கல்லூரி நிர்வாகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.