
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள்.
இந்நிலையில், இருவருக்கும் காதல் எப்போது, யாரால் தொடங்கியது என்ற கேள்விக்கு ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், “தனுஷ் சார்தான் நானும் ரௌடிதான் கதையை நயனிடம் (நயன்தாராவிடம்) சொல்லச் சொன்னார். நயன்தாராவுக்கும் அது பிடித்திருந்தது. நயன் படத்தில் வந்ததால்தான் முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற விரும்பாத விஜய் சேதுபதியும் இதில் நடிக்க சரி என்றார். இந்தப் படத்தின் மூலமாகத்தான் நாங்கள் பழக ஆரம்பித்தோம். ஒரு வருடத்தில் நாங்க நெருக்கமாகிவிட்டோம்” என்றார்.
காதல் குறித்து நடிகை நயன்தாரா அதே நேர்காணலில், “இது எங்களுக்கு மிகவும் இயற்கையாக நடந்தது. நாங்கள் அப்படியே வாழ்க்கையின் ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த்தோம். 3 மாதங்கள் ஆன பிறகுதான் புரிந்தது எங்களுக்குள் இது இருக்கிறதென” என்றார்.
2015இல் நானும் ரௌடிதான் திரைப்படம் வெளியானது. 2014இல் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.