அண்ணா தொடரிலிந்து நடிகை தர்ஷு சுந்தரம் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடனக் கலைஞர் கெளரி அப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு அண்ணா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் செந்தில் குமார் நாயகனாக அண்ணா பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்து வருகிறார்.
அண்ணன் - தங்கைகள் பாசத்தை மையமாக வைத்து இந்தத்தொடர் உருவாக்கப்படுகிறது. பாசமுள்ள அண்ணன் நான்கு தங்கைகளை வளர்க்கிறார். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், சந்திக்கும் சவால்களே அண்ணா தொடரின் மையக்கதை.
இந்தத் தொடரில் நான்கு தங்கைகளாக நடிப்பவர்கள் சுனிதா, தர்ஷு சுந்தரம், பிரீத்தா சுரேஷ், ஹேமா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் விஜே தாராவுக்கு பதில் தற்போது தர்ஷு நடித்து வருகிறார்.
இதனிடயே தற்போது தர்ஷு சுந்தரமும் அண்ணா தொடரிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட சில காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தனிப்பட்ட வேலைகளுக்காக அண்ணா தொடரிலிருந்து விலகுகிறேன். என்னுடைய தனிப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே விலகுகிறேன். தொலைக்காட்சிக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் நன்றி. என்னுடைய பாத்திரத்தில் நடிப்பவருக்கும் நீங்கள் இதே ஆதரவைக் கொடுக்க வேண்டும். உங்களை வேறு சில புதிய முயற்சிகளின் மூலம் சந்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தர்ஷு சுந்தரம் பாத்திரத்தில் நடிகை கெளரி நடிக்கவுள்ளார். இவர் நடனக் கலைஞராவார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.