நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்த படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
இப்படம் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்ததோடு விஜய்யின் மார்கெட்டையும் உயர்த்தியது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருப்பார். படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. அதிலும் அப்படிபோடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் அதிகம் கேட்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி திரைப்படம் 4கே டிஜிட்டல் தரத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி இதனை வெளியிட்டுள்ளது. மறுவெளியீட்டிலும் இப்படத்திற்கு ரசிகர்கர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி கோபாலன் நடிகர் விஜய்யை சந்தித்து மாலை அணிவித்தார். அப்போது, “கில்லி திரைப்பட மறு வெளியீட்டில் ரசிகர்களோடு திரையரங்கில் அப்படத்தை பார்த்த பொழுது அவர்களின் கொண்டாட்டம் எனக்கு வியாபாரத்தைத் தாண்டி ஒரு திரைப்பட ரசிகனாக சிலிர்ப்பைத் தந்தது. திரைத்துறை நலம் விரும்பியாக நீங்கள் வருடத்துக்கு ஒரு படமாவது தொடர்ந்து நடிக்க வேண்டும்” என்று என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அதற்கு நடிகர் விஜய் சிரித்துக்கொண்டே சரி என்றார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்துடன் கில்லி படத்தின் இயக்குநர் தரணியும் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை பரிமாற்றிக்கொண்டனர்.