நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார்.
முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் பெயரை அறிவிக்கவில்லை.
படத்தின் அறிவிப்பு விடியோவில் போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970 - 80களில் நடக்கும் பிரியடிக் படமாக (period film) உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் மதுரையில் துவங்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருச்சி, சிதம்பரம், ஹர்யாணாவிலும் படப்பிடிப்பை மேற்கொள்ள உள்ளனராம்.