நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் காலமானார். அவரது மறைவையொட்டி, பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தியதுடன் விஜயகாந்த் குறித்து நல்ல நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அம்மாவுடன் சென்றிருந்தார். இந்நிலையில், புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ,
“நானும் எனது தாயாரும் மறைந்த நடிகர் தே.மு.தி.க. தலைவர் புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த திங்கள் கிழமையைன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கேப்டன் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
அவர்களின் குடும்பத்தாரோடு உரையாடினேன் அப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். திரையுலகைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும்தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. விஜயகாந்த சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார். அவர் நடித்த ’கண்ணுபடப் போகுதையா’ படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நான் கோரியோகிராபி செய்திருக்கிறேன் ரொம்பவும் அழகான நடனமாடினார். என்னையும் ரொம்ப என்கிரேஜ் செய்தார். அப்படிப்பட்டவரின் பையனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் வரவேற்பு தர நானே இறங்கி அனைத்து விளம்பர பணிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அந்தப்படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு படத்தின் விளம்பர விழாக்களில் கலந்துகொள்வேன்.
திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள் யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள் தம்பி சண்முகப்பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை, அப்போது அவரது ஆத்மா சந்தோசப்படும். இது என் மனதிற்கு தோன்றியது. அவரது மூத்த மகன் பிரபாகரன் அரசியலில் இருக்கிறார் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதனால், பகிர்கிறேன். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.