பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.
பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான அயலானும் கேப்டன் மில்லர் படமும் முதல்நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அருண் விஜய்யின் மிஷன் படத்திற்கு அதிக திரைகள் கிடைக்காததால் அதன் வசூலில் பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் மிஷன் படத்துக்கு திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
அயலான் திரைப்படம் கடந்த 10 நாள்களில் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகவும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ.70 கோடியை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மிஷன் படமும் ரூ.26 கோடியை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஜெயம் ரவியின் சைரன்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
அயலான் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து திரைக்கு வந்த படமென்பதால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வெளியான பின், குழந்தைகளிடம் வரவேற்பைப் பெற்றதால் வசூலில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த வார முடிவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டாம் பாகத்திற்கான விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு மட்டும் ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளார்களாம்!